23/06/2024

அமைதி

பெண் பார்க்கும் படலத்தில்
அமைதி என்றால்
சம்மதம் என்று அர்த்தம்!

போர்புரியும் தருணத்தில்
அமைதி என்றால்
சமாதானம் என்று அர்த்தம்!

ஆர்ப்பரிக்கும் அலைகள்
ஆழ்கடலில் அமைதியுறும்!
ஆர்ப்பரிக்கும் தலைகள்
ஆடி முடிந்தால் அடங்கிவிடும்!

வெந்த பூரியில்
சப்தம் வருவதில்லை; அஃதே
அமைதிப் பூங்காவில்
இரைச்சல் இருப்பதில்லை....

இருளின் அமைதியை
ஒளி கிழிக்க லாம்
ஆனால் காயப்படுத்துமா என்ன?

உலக அமைதிதான்
ஐநாவின் இலக்கு;
ஆனால் பாவம்
அமைதிதான் அங்கே
விதி விலக்கு!

உலக அமைதிதான்
மகரிஷியின் இலக்கும்
ஆனால்
தனிமனித அமைதியே
அதற்கான விளக்கு!

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் !

கண்மூடி இருப்பவரெல்லாம்
அமைதியாய் இருப்பதாய் அர்த்தமில்லை...
அவர்கள் மனத்திரைக்குள்
ஆயிரம் படம் ஓடலாம்...

அஃதே
கண்திறந்து இருப்பவரெல்லாம்
விழிப்பு நிலையில் இருப்பதாகவும்
அர்த்தமில்லை
சில பள்ளி மாணவர்கள்போல்
விழித்தும் உறங்கலாம்!

அமைதி என்பது
புலன் சார்ந்ததோ
இடம் சார்ந்ததோ அல்ல
அது; முற்றிலும்
அகம் சார்ந்ததே..!!

ஆம்...
அகம் திறந்தால்
சமாதிநிலை ஆகும்
அகம் கொதித்தால்...?
சமாதியே நிலையாகும்!

அமைதி! அமைதி!! அமைதி!!!

✍️செ. இராசா

No comments: