23/02/2026

இரண்டு நண்பர்கள்

 



இளவரசனும் சங்கரும் பால்யகால நண்பர்கள். கிட்டத்தட்ட எட்டாவது படிக்கிற காலத்தில் இருந்து தற்போது வரையுமே நல்ல நண்பர்களாகத்தான் இருந்தார்கள். இருந்தார்கள் என்றால் இப்போது இல்லையா என்றா கேட்கிறீர்கள்?!!. இருங்க சொல்கிறேன்.

வேறு ஏதோவொரு பள்ளியில் இருந்து மாறுதலாகி சங்கர் படிக்கும் பள்ளிக்கு இளவரசன் வந்தபோது அவனிடம் யாருமே அவ்வளவாக பேசவில்லை. அப்போது சங்கர்தான் இளவரசனிடம் நெருங்கிப் பழகினான். சங்கரின் ஊரோ பள்ளி இருந்த அதே ஊர்தான். ஆனால் இளவரசன் ஒரு 5 கிலோமீட்டர் தாண்டி உள்ள கிராமத்தில் இருந்து வருபவன். சிலசமயம் சைக்கிளில் பலசமயம் பேருந்தில் தான் வருவான். பள்ளிக்கூடம் மாலை 4 மணிக்கு விட்டாலும் மாலை 6:30 மணிக்கு வரும் பேருந்துக்காய்க் காத்திருந்துதான் ஊர் போய்ச்சேருவான். அந்த இடைப்பட்ட நேரத்தில் சங்கரின் வீட்டருகே விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான் இளவரசன். இப்படித்தான் இவர்கள் இருவருக்குமிடையே நட்பு வளர்ந்தது. ஆனால், இளவரசனின் படிப்பு இந்தப் பள்ளிக்கு வந்தபின் படுமோசமானதால் அவன் தந்தையார் தன் ஊரிலிருந்து கிட்டத்தட்ட 30கிமீ தொலைவில் உள்ள வேறு ஒரு பள்ளியில் விடுதியில் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்து விட்டார்கள். இளவரசன் வாழ்வில் இது மிகப்பெரிய வடுவை உண்டாக்கியது. அப்போதும்கூட இளவரசன் சங்கருக்கு கடிதம் மூலம் தன் நட்பில் ஆறுதல் அடைந்தான். ஒருமுறை தன் புதிய பள்ளியில் ஆண்டுவிழா அன்று மேடை நாடகத்தில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கியபோது தன் நண்பனையும் அந்தப் பள்ளிக்கு அழைக்க அவனும் வந்திருந்தான். தன் அதீத பிடிவாதத்தால் அந்தப் பள்ளியில் இருந்து அடுத்த வருடமே விலகி தன் நண்பன் இருந்த ஊருக்கு அருகிலேயே இளவரசு வந்துவிட்டான். பிறகு இளவரசு பொறியியல் கல்லூரிக்கும் சங்கர் வேறு ஒரு கலைக் கல்லூரிக்குமாய்ச் செல்லும் சூழல் உருவானது. எங்கே எப்படிப் போனாலும் இருவரும் நட்பை விடாமல் தொடர்ந்தார்கள்.

பிறகு வேலை நிமித்தமாக இளவரசு தொலைதூரம் சென்றான். சங்கர் உள்ளூரிலேயே வேலை பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென சங்கரின் அம்மா இறந்த செய்தி கேட்டு இளவரசு பதறிப்போய் ஓடிவந்ததுதான் அவன் அனுபவித்த முதல் மரணச் செய்தி. அந்தக் குடும்பத்தில் ஒருவனாக இருந்து அனைத்து காரியங்களையும் முடித்துவிட்டு மிகவும் கனத்த இதயத்தோடு இளவரசு வேலைக்குச் சென்றான்.

கால ஓட்டத்தில் வெளி மாநிலம் வெளிநாடு என எங்கெங்கோ சென்றாலும் இளவரசு தன் நண்பனை என்றுமே மறவாமல் வரும்போதெல்லாம் தன் நண்பனைக் பார்த்து இரவெல்லாம் தூங்காமல் மனம்விட்டுப் பேசித்தான் பிரிவான். ஒருமுறை சங்கரின் தங்கைக்குத் திருமணம் என்கிற செய்தி கேட்டவுடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து பணம் ஏதும் வேண்டுமாடா என்று கேட்டு உடனேயே தன்னிடம் இருந்த ஐம்பதாயிரம் ரூபாயை இந்தாடா என்று கொடுத்தான். அந்த நேரத்தில் சங்கர் வடித்த ஆனந்தக் கண்ணீரில் அவர்களின் நட்பு செழித்து வளர்ந்தது‌ அப்படி...அவன் வேறு இவன் வேறு என்றெல்லாம் இருவருமே நினைத்ததே இல்லைதான்.

உள்ளூரில் கஷ்டப்பட்ட சங்கருக்கும் அரசு வேலை கிடைக்கிறது. வெளிநாட்டில் இளவரசும் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறான். ஒருமுறை இளவரசு விடுமுறையில் வந்தபோது மொட்டை மாடியில் இப்படிப் பேசுகிறான், "நண்பா, நாம் எப்போதும் ஒன்னாவே ஒரே வீட்டுல இருக்கணுன்டா.... கல்யாணம் ஆனாலும் சரி.... மாடியில் நீ...கீழ்வீட்ல நான்...இல்லையினா மாறி கூட இருந்துக்குவோம். ஆனால் ஒரே வீட்ல தான்டா இருக்கனும்".. இப்படிலாம் பேசிய இவர்களின் வாழ்க்கை வேகமாகவே ஓடுகிறது. கல்யாணம் ஆகி இருவருக்கும் குழந்தைகள் எல்லாம் வந்துவிட்டது.சொன்னது போலவே இளவரசு பார்த்துப் பார்த்து ஒரு வீடு கட்டி அதில் கீழ் வீட்டில் சங்கரின் குடும்பமும் மேல்வீட்டில் தானுமாய் வசித்து வருகிறான். இப்ப வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லைதான்.

இப்ப சங்கரின் மனைவிக்கும் ஒரு ஆசை வருகிறது. வேறு ஒன்றுமில்லை தானும் ஒரு வீடுகட்டி போகனும்னு. நியாயமான ஆசை தானே?.... இதுபற்றி முன்பே நண்பர்கள் பேசியுள்ளார்கள், இப்படி: "நண்பா...நம்ம மனைவிகளின் ஆசை வேறு விதமாக இருந்தால் நாம் என்ன செய்றது நண்பான்னு. அதுக்கு இளவரசு சொன்னான்...டேய்... அவுங்களுக்காக கட்டுற வீடும் இருக்கட்டும்....அதை வாடகைக்கு விட்டுட்டு..நாம ஒன்றாகவே இருப்போம்" ஆனால் இப்படி பேசுறதெல்லாம் நடந்திடுமா என்ன?!!..
ஆனாலும்...என்ன நினைச்சாங்களோ தெரியல... சங்கர் குடும்பம் புதுவீடு கட்டி பால் காய்ச்சிப் போயிடுச்சு. இதுல இளவரசுக்குத்தான் சரியான அதிர்ச்சி. காரணம்... அவனால் சின்ன வயதில் போட்ட ஒப்பந்தத்தை மீறியதைத் தாங்க முடியவில்லை. இது என்ன கொடுமையா இருக்கு?! கால ஓட்டத்தில் இதையெல்லாமா எல்லோரும் ஞாபகம் வச்சுக்குவாங்க...அப்படின்னு அவன் மனசுக்குள்ள ஒரே சூறாவளி அடிச்சாலும் அவனால் ஏத்துக்கவே முடியலை. தன் நண்பன் இப்படி சரியாக் கூட வருத்தம் தெரிவிக்காமல் சட்டுன்னு போயிட்டானேன்னு இளவரசு சங்கரிடம் பேசுறதே இல்லை. இவன் பேசலையேன்னு அவனும் பேசறது இல்லை. அப்புறம் இரெண்டுபேருக்குமான இடைவெளி நாளுக்கு நாள் அதிகரிச்சு இப்பப் பல வருசம் ஆயிடுச்சு. ஆனாலும் இளவரசு இப்போதும் நண்பனை நினைச்சிட்டுதான் இருக்கான். சங்கரும் நினைக்காமலா இருப்பான்?!!..

No comments: