21/03/2024

உழைப்பவர் வாழ்க

வன்மம் நிறைந்தது வையகம் நோக..
இன்னல் மிகுந்தது..ஈந்தவர் மாற..
நேர்மை குறைந்தது நிம்மதி போக..
வாய்மை வளைந்தது வானமே நாண‌‌

தர்மம் நிறைந்துளத் தலைவரும் இல்லை!
கர்வம் குறைந்துளக் கவிஞரும் இல்லை!
தர்க்கம் எழும்பிடா சபைகளும் இல்லை!
வர்க்கம் புகுந்திடா அமைப்புகள் இல்லை!

காமம் குடிபுகா மாந்தரும் உண்டோ?
சாமம் முடிந்திடா நாட்களும் உண்டோ?
நாமம் கெடுத்திட நினைப்பவர் உண்டோ?
ஈமம் பிடித்திட இறப்பவர் உண்டோ?

அன்பு மிகுந்திட அகிலமும் தோன்ற
பண்பு நிறைந்திட பாடலும் பாட
நன்மை நிலைத்திட நல்லவர் ஓங்க
உண்மை ஜெயித்திட உழைப்பவர் வாழ்க!

✍️செ.இராசா

No comments: