தானும் எடுக்காமல் தந்திடவும் எண்ணாமல்
பேணும் நிலைக்கென்ன பேர்
(1)
அடிஉரம் தேவையென ஆயிரம் கேட்டால்
முடிந்தபின் செய்வார் முறை
(2)
உயிர்காக்க இங்கே உதவாத செல்வம்
மயிர்போலத் தானே மதிப்பு
(3)
கொடுக்கக் கொடுக்கக் கொடுத்திட வேண்டிக்
கொடுப்பான் இறைவன் கொடு
(4)
ஈயாமல் சேர்க்கின்ற எல்லாமும் ஓர்நாளில்
நோயாலேப் போகும் நினை
(5)
சுவிஸ்ஸில் பணம்போட்டு சொல்லாமல் போனால்
குவித்தபணம் என்னாகும் கூறு?
(6)
பணம்பணம் என்றே பணத்தின்பின் போவோர்
பணத்தால்தான் மாய்கின்றார் பார்
(7)
அறமின்றி சேர்க்கின்ற அத்தனை காசும்
இறுதியில் மாறும் எமன்
(8.)
சாருக்கான் ஆனாலும் சட்டம்முன் நீதியின்முன்
யாருக்கும் செல்லாது காண்
(9)
ஏமாற்றிச் சேர்க்கின்ற எல்லாமும் கட்டாயம்
ஏமாற்றும் என்பதை எண்ணு
(10)
செ. இராசா
(பட உதவி: தம்பியும் தம்பி மகனும்)
குறிப்பு:
இந்தப் படத்திற்கும் கவிதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புரியுது....எப்பதான் நீ சம்பந்தமாய் போட்டிருக்க..அதானே![]()
![]()
![]()
![]()
25/10/2021
பயனில்லா பணம் -----------வள்ளுவர் திங்கள் 182
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment