31/08/2024

விற்பனைக்கல்ல


தமிழ்த்தாய் வாழ்த்து
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
ஆதியிலே அகத்தியமாய்
அதற்கடுத்தத் தொல்காப்பியமாய்
திருவள்ளுவரின் திருக்குறளாய்
திருமூலரின் திருமந்திரமாய்
கம்பரின் காவியமாய்
கவியரசின் கவிதைகளாய்
தரணியிலே சிறந்தோங்கும்
தமிழ்த்தாய்க்கு எம் முதல் வணக்கம்
அவை வணக்கம்!
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
அன்னைத் தமிழ்போற்றும்
....ஆன்றோர்கள் மத்தியில்
என்னையும் ஏற்றிவிட்டீர்!
.....ஏறிவிட்டேன்- மன்னிப்பீர்!
பண்ணைத் தமிழவைமுன்
....பாடுகின்ற வாய்ப்புவந்தால்
மண்ணும் உயரோதோ
....விண்!
சபைக்கு எம் வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டு இதோ எம் கவிதை...
விற்பனைக்கல்ல
🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
இந்தக் கவித்தோட்டத்தில்
எல்லாவித மலர்களும் உண்டு!
ஆம்..
புதுப்புது நிறங்களில் பூக்கும்
நவீனப்பூக்களும் உண்டு!
மரபியல் மாறாமல் பூக்கும்;
வெண்பாப் பூக்களும் உண்டு!
சிறிதாய்ப் பூக்கும்
குறும்பாப் பூக்களும் உண்டு!
பெரிதாய்ப் பூக்கும்
விருத்தப்பா பூக்களும் உண்டு!
இங்கே எல்லா மலர்களும்
ஒரே மாதிரி மலர்ந்தாலும்
எல்லாமும் ஒரிடம் சேர்வதில்லையே
சில இறைவனுக்காக
சில மனிதர்களுக்காக
சில அஃறிணைகளுக்காக
சில எதற்காகவோ?!
என்னைப் பொறுத்தவரையிலும்
மலர்களுக்குள் பேதமில்லை
எல்லா மலர்களும்
அவை அவையில் தனித்துவமானதே.
ஆனால்...
அதை அனுபவிப்பர்கள்தான்
நிறை குறை பார்க்கிறார்கள்
என்ன செய்ய?!!
இந்தத் தோட்ட மலர்கள்
மரண ஊர்வலம்போனால்கூட
நான் கவலைப்படுவதில்லை
எங்கேயும் போகாமல்
இங்கேயே வாடி வதங்கும்போதுதான்
பெரிதும் கவலை கொள்கிறேன்..
இந்தத் தோட்ட மல்லிகளை
அதிகம் நேசிப்பவன் நான்தான்
அதற்காக
மாற்றான் தோட்டத்து மல்லிகைகளை
வெறுக்குமளவு நானொன்றும்
கல் நெஞ்சக்காரனல்ல
பூ நெஞ்சக் காரனே..
ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்!
நீங்கள் என்னதான்
ராப்பூ பாப்பூ என்ற
நெகிழிப் பூக்களை
இப்போது கொண்டாடினாலும்
கிராமிய மணம் கமழும்
நாட்டுப்புறப் பூக்கள்தான்
எப்போதும் வாடாதென்பதை
மறந்து விடாதீர்கள்!
இயல்பு(பூ) இல்லாமல்
வெறும் இசைப்பு(பூ) மட்டுமிருந்தால்
பயனுண்டா என்ன?
இல்லை
இரு பூக்களும் இணைந்தால்தான்
இனிதாகும் ஓர் மாலை..
இல்லையேல் அது வெறும் பீழை..
இந்தத் தோட்டத்தைச்சிலர்
இலக்கியப் பூஞ்சோலை என்பர்!
இல்லை இல்லை
இது கலோக்கியல் பாச்சோலை என்பர்சிலர்!
இன்னும் சிலரோ
இது திரையிலும் மணக்கும்
கானகக் கவிச்சோலை என்பர்!
வேறு சிலரோ
இது தனித்துவமாய் மணக்கும்
கானா ரகச்சோலை என்பர்!
நீங்கள் எப்படி வேண்டுமானாலும்
சொல்லிக்கொள்ளுங்கள்...
இது எல்லாமும் பூக்கும்
தமிழ்ச் சோலையே
தமிழ்ப்பாச் சோலையே...
இச்சோலையில் பூக்கும் பூக்களில்
எல்லாவற்றிற்கும் ஓர் விலையுண்டு!
அதே சமயத்தில்
எல்லாமும் விற்பனைக்கும் அல்ல..
ஆம்...
அவை
அவை......உங்களுக்கானவையே...
நம் மக்களுக்கானவையே...
நன்றி வணக்கம்!

28/08/2024

பள்ளி வாழ்க்கை முடியப்போகுது

 (சூழல் 1990 வாக்கில் நடக்கும் 12 ஆம் வகுப்பு பிரிவு உபசார விழா...)

விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா விட்றா
என்ன இப்போ ஆகப்போகுது - நம்ம
பள்ளி வாழ்க்கை முடியப்போகுது
எங்கே மச்சி போகப்போகுது- லைஃப
எக்ஸாம் ரிசல்ட் மாத்தப்போகுது..
விட்றா மச்சி பார்த்துக்கலாம்...
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா விட்றா (2)
இனி..
குச்சி ஐஸ மாத்தி மாத்தி திங்க முடியுமா?!
சத்துணவு முட்டைருசி வெளியில் கிடைக்குமா?!
இலந்தைப்பழம் பொறக்கித் திங்கும் உறவு தொடருமா?!
ஆண்டுவிழா ஆட்டமினி நமக்குக் கிடைக்குமா?!
எங்கேப் போகப் போறோம்- இனி
என்ன வாகப் போறோம்..
ஒன்னும் புரிய வில்லை- அத
எப்படி மச்சி சொல்ல...
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா மச்சி பார்த்துக்கலாம்...
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா விட்றா
கனிமொழிக்கும் கவிதாவுக்கும் ரூட்டு விட்ட கதைங்க
பசுமரத்துல ஆணிபோல நெஞ்சில் தச்ச வலிங்க
கள்ளியிலும் பள்ளியிலும் கிறுக்கி வச்ச பேரு
கல்லு வெட்டில் பொறிச்சதுபோல் ஜொலிக்குதங்கேப் பாரு
எங்கேப் போகப் போறோம்- இனி
என்ன வாகப் போறோம்..
ஒன்னும் புரிய வில்லை- அத
எப்படி மச்சி சொல்ல...
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா மச்சி பார்த்துக்கலாம்...
விட்றா மச்சி பார்த்துக்கலாம்
விட்றா விட்றா

26/08/2024

பெண்ணேவுனைக் கண்டாலெனுள்


பெண்ணேவுனைக் கண்டாலெனுள்
...பீறும்மொழி யாவும்;
கண்ணேயதைத் தந்தாலுயர்
...காதல்கவி யாகும்!
அன்பேயெனச் சொன்னாலெனுள்
....ஆறும்பல சோகம்;
உன்பேரினைக் கேட்டாலெனுள்

..... உற்சாகமாய் மாறும்! 

25/08/2024

பாலும் தெளிநீரும்

 

பாலும் தெளிநீரும் பக்குவமாய்ச் சேரவிட்டு
மூளும் தணலில் நுரைகட்ட- நாளும்
குளம்பிப் பொடிதூவி (coffee powder) கோப்பையில் தந்தால்
விளங்கும் இல்லா(ள்) இனிப்பு!

20/08/2024

வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்(2)

வாழ்க வாழ்க வளமுடனே(2)
வாழும் வாழ்வினை
...அர்த்த மாக்கிடும்
........வாழ்க வளமுடன்!
நாளும் நாவிலே
...நாமும் சொல்லுவோம்
.........வாழ்க வளமுடன் !
தேயும் ஆயுளை
....தேற்றும் மந்திரம்
..........வாழ்க வளமுடன்!
பாயும் வேங்கையைப்
.....பணிய வைக்குமே
.........வாழ்க வளமுடன்!
வாழ்க வாழ்க வளமுடனே! (2)
ழகர ஒற்றினை சொல்லும்
...வேளையில் என்ன நடக்குது?
வளைந்த நாக்கது தொட்ட
... வேளையில் தூண்டப் படுகுது!
....சக்கரம் தூண்டப்படுகுது!
துரிய நிலையிலே வாழ்த்தும்
... வேளையில் என்ன நடக்குது?
பரியின் வேகத்தில் எண்ண
....அலையெலாம் விண்ணில் பாயுது
....அலையெலாம் ஆற்றல் ஆகுது!
வாழ்க வாழ்க வளமுடனே! (2)
வாழ்க வளமுடன் சொல்லில்
...பிழையென யாரு சொன்னது?
ஆழ்ந்து நோக்கிட நேரம்
...ஒதுக்கிடா மாந்தர் சொல்வது!
...ஏற்றிடா மாந்தர் சொல்வது!
மகர ஈற்றுடன் அத்து
....சாரியை வேண்டும் என்பது
தவிர்க்கச் செய்யலாம் தேவை
.....ஏற்படின் நன்னூல் சொன்னது!
.....குறள்களில் சான்று உள்ளது!
வாழ்க வாழ்க வளமுடனே! (2)

19/08/2024

வாழ்க பல்லாண்டு மனைவியாரே!


புதுப்பட்டி பூவாய்
....புவனத்தில் பூத்தாய்!
மதகுபட்டி மண்ணில்
.....மணந்தாய்!- புதுவாழ்வாய்!
கத்தார் குடியேறிக்
.....காரைக் குடிபுகுந்தாய்!
முத்தாய் இரண்டுதந்தா
.....யே!
சினத்தில் சிவனாய்!
... சிரிப்பில் நரனாய்!
குணத்தில் குகனாய்!
.....கொடுப்பாய்! - அணங்காய்!
இரண்டாமென் தாயாய்!
.....எனக்கானத் தூணாய்!
வரமான வாழ்வானா
.....யே!
வாழ்க பல்லாண்டு மனைவியாரே!
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்

17/08/2024

வெற்றி மட்டுந்தான் நம்மப்பேரைச் சொல்லுங்க

 

வெற்றி மட்டுந்தான்- நம்மப்
... பேரைச் சொல்லுங்க
கற்ற வித்தையக் காட்டி
...தட்டித் தூக்குங்க.
கால தாமதம் ஆனால்
...பொறுமை வேணுங்க
காலம் வந்துட்டா வெற்றி
...தேடி வருமுங்க...

வெற்றி வெற்றி வெற்றி வெற்றி -ஒரு
வெற்றி பெற்றால் எல்லாம் வெற்றி (2)

முட்டி மோதுறோம் ஒன்னும்
கிடைக்கவே இல்லை
தட்டிப் பாக்குறோம் கதவு
தொறக்கவே இல்லை
வாய்ப்பு தேடியே எங்க
வயசு போகுது
ஏய்ச்சு பொழைக்கிற கூட்டம்
எங்கும் வாழுது..

இந்தக் கதையெல்லாம் அட
என்றும் தொடருது..உன்
நொந்தக் கதையெல்லாம்- ஒன்னு
மறக்க வைக்குது...எது
மறக்க வைக்குது?...அதான்
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி -ஒரு
வெற்றி பெற்றால் எல்லாம் வெற்றி (2)

வத்தலும் தொத்தலுமாய்

 

வத்தலும் தொத்தலுமாய்
...... வந்தவர்கள் பின்நாளில்
குத்தலும் கொஞ்சலுமாய்
......கொக்கரித்தார்- உத்தமர்போல்
வக்கனையாய் எத்தனையோ
......வாக்குறுதி தந்திங்கே
தக்கவைத்தார் தன்குடியைத்
......தான்!

16/08/2024

தனையறிய முற்பட்டால்

 

தன்முனைப்பு (Ego) நீங்கத்
.....தனையறிய முற்பட்டால்
முன்னேற்றம் கிட்டும்
.....முயன்றுபார்- என்றைக்கும்
தர்மம் பிறழாமல்
.....தைரியம் குன்றாமல்
கர்மத்தில் வைப்பாயே
......கண்!

(வேதாத்திரிய சேவைக்கு மேலும் ஓர் அங்கீகாரம்... வாழ்க வளமுடன்)


15/08/2024

அடங்கிவிடுகிறது அனைத்து சுதந்திரமும்

 

அடிமைத் தளையை அறுத்தெறிந்து...
சுதந்திரம் வாங்கினோம்தான்
ஆனால் உண்மையில்
அடிமைத்தன உணர்வை
அறுத்தெறிந்தோமா?!
இல்லையே...
இருந்திருந்தால்
படித்தோர் பணிபுரியும் ஐடி முதல்
பாமரர் பணிபுரியும் பங்க்கடை வரை
நேரச் சுரண்டலுக்காய்
போராடி இருப்போமே....?!!
அட...போங்க சார்..
இங்கே இப்படித்தான்;
என்பதில் அடங்கிவிடுகிறது
அனைத்து சுதந்திரமும்...
✍️செ. இராசா
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள் அனைவருக்கும் 🙏🙏🙏
(கத்தார் நாளிதழில் நேற்றும் இன்றும் வந்த சுதந்திர தினமலர் புத்தகங்கள் உங்களின் பார்வைக்கு)

07/08/2024

திருமாவளவன்

 


அத்துமீறி
திமிறி எழு சொன்னது யாரு
அவர்தானே எங்களோட அம்பேத்காரு

டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!

அண்ணன்திரு மாவளவன்
அண்ணல்உரு வானவனே....
மண்ணில்இவன் போலருவன்
இன்னும்உரு வாகலையே...

டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!

சரணம்-1
காலமுள்ள காலம்வரை கட்டுப்பட்டு கிடக்கணும்னு
கூறுகெட்ட கூட்டமொன்னு கூவிநின்ன வேலையில
கொட்டகொட்ட குனிஞ்சதெல்லாம் போதுமுன்னு சொன்னவரு
தட்டி கேட்ட அண்ணலைப்போல் நம்மகூட நின்னவரு

எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கணுமா இல்லையா
இல்லாதோர் நல்வாழ்க்கை அடையணுமா இல்லையா
நல்லோரும் இந்நாட்டில் பொழைக்கணுமா இல்லையா
நம்மோட உரிமைக்காக
பேசனுமா இல்லையா

டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!

அண்ணன்திரு மாவளவன்
அண்ணல்உரு வானவனே....
மண்ணில்இவன் போலருவன்
இன்னும்உரு வாகலையே...

Rap]
யாரு மேல.... யாரு கீழ..
flood வந்தா.....தண்ணி உள்ள..
மாடி வீடு...கூரை வீடு
எர்த் குவாக்கில்....இடிஞ்ச கூடு
காசு பணம் காஸ்ட்டு எல்லாம்
வேஸ்ட்டுதானே போக சொல்ல..
பின்ன எதுக்கு பிரிக்கும் பேச்சு
பிரெண்ட்ஷிப் ஆனா சரியாப் போச்சு..
நீயும் நானும் ஒன்னு - இதை
நினச்சா தொறக்கும் கண்ணு..இதில்
அண்டர் ஸ்டாண்டிங் இல்லை- அப்புறம்
நானும் என்னத்த சொல்ல?

சரணம் -2
ஊரைவிட்டு சேரிகள ஒதுக்கியது யாருங்க?
சாதிப்பேரை சொல்லிசொல்லி அடக்கியது ஏனுங்க?
சட்டத்தால மாத்தனுன்னு நினைச்சவரு யாருங்க?
அப்பக்கூட சலுகையான்னு கேக்குறது ஏனுங்க?

படிச்சாத்தான் முன்னேற்றம் கிடைக்கிமுன்னு சொன்னாரு
அதிகாரம் வந்தால்தான்
மாற்றமுன்னு சொன்னாரு... (அண்ணலு)

ஆனால்;
படிப்புக்கே போராடும் சூழ்நிலையக் கண்டாரு
வெடிச்சாரு துடிச்சாரு வெகுண்டாரு தலைவரு...

டெல்லி கிடுகிடுங்குது- அண்ணனோட
சொல்லில் வெடிவெடிக்குது!
அன்பில் உறவிருக்குது- தப்புசெஞ்சா
கண்ணில் பொறிபறக்குது!

அண்ணன்திரு மாவளவன்
அண்ணல்உரு வானவனே....
மண்ணில்இவன் போலருவன்
இன்னும்உரு வாகலையே...