17/07/2024

நான்

நானிருக்கும் போதெல்லாம்
....நாமொன்றும் செய்வதில்லை
நானின்றிப் போனால்தான்
....நாம்செய்வோம்- நானிலத்தில்
நானிருக்கச் செய்தாலும்
....நன்றாகா என்றறிந்து
நானின்றிச் செய்வீர்கள்
....நன்கு!

✍️செ. இராசா

15/07/2024

அழுத்தம்


 
அழுத்தம் என்னும் பேராற்றல்தான்
இந்த மொத்தப் பிரபஞ்சத்தின்
மூல விசை!
அழுத்தம் என்னும் ஓராற்றல்தான்
இந்த உள்ளப் பிரளயத்தின்
உந்து விசை!

இரு விரல்களின் உராய்வில்
சொடக்கு வருவதற்கும்
இரு உடல்களின் உராய்வில்
ஜனனம் வருவதற்கும்
மூல காரணம் ஒன்றுதான்
அது; அழுத்த விசையே...!

சின்னப் பம்பரம் சுழல்வதற்கும்
பெரிய கோள்கள் சுழல்வதற்குமே
மூல காரணம் ஒன்றுதான்
அதுவும்; அழுத்த விசையே..!

அழுத்தம்
குறைந்தாலும் ஆபத்து
கூடினாலும் ஆபத்து
சந்தேகமெனில்
பீபி(BP) உள்ளவர்களிடம் கேளுங்கள்!

அழுத்தம்
இருந்தாலும் பிடிக்காது
இல்லையென்றாலும் ருசிக்காது
சந்தேகமெனில்
ஐடி(IT) பணியாளர்களிடம் கேளுங்கள்!

ஆழம் அதிகரித்தால்
அழுத்தம் அதிகரிக்கும்
இது அறிவியல்...

ஆழம் அதிகரித்தால்
அழுத்தம் குறையும்
இது ஆன்மீகம்..

எனில் அழுத்தம் சரியா? தவறா?

தரிசான மனத்தை உழுது
வளமான மனமாக்கினால்
அழுத்தம் சரியே...
அழகான மனத்தைக் அழுத்தி
அழுக்கான மனமாக்கினால்
அழுத்தம் தவறே...

கரி பிடித்த சட்டியை
அழுத்தித் தேய்த்தால்தான்
சுத்தமாகும்!
அஃதே..
வினை பிடித்த சிருஷ்டியை
அழுத்தி நீக்கினால்தான்
சுத்தமாகும்...

பூனை யானைமேல் நடப்பதும்
யானை பூனைமேல் நடப்பதும்
ஒன்றாகாதுதான்....ஆனால்
என்றோ நடந்த ஒன்றை
எப்போதும் அசைபோட்டால்
பூபோன்ற அழுத்தமும்
பூகம்ப அழுத்தமாகலாம்..
ஜாக்கிரதை..
அழுத்தம்
இடம்பொறுத்தும் மாறும்..
பொருள்பொறுத்தும் மாறும்...

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல்
அழுத்தத்தை அழுத்தியே எடுக்கலாம்
முயன்று பாருங்கள்...!!!

அழுத்தம் அழகாக்கும்
அந்த இஸ்திரி பெட்டியைப்போல்!
அழுத்தம் அழகாகும்
இதோ இந்தக் கவிதையைப்போல்!

✍️செ. இராசா

11/07/2024

ஒன்றில் இருந்து பத்துவரை



ஒருமுறை கிடைப்பதே
.........வாழ்க்கையடா- அதை
உணர்ந்து கொண்டாலே போதுமடா!
இருமனம் இணைவதில்
.........இன்பமடா- அதில்
பிறந்திடும் பிள்ளைகள் செல்வமடா!

மூன்று கர்மங்கள்
....உள்ளதடா- அதன்
முறையினில் தெளிவதே ஞானமடா!
நான்கு தர்மங்கள்
.....இருக்குதடா- அதில்
நான்கிலும் மகிழ்பவன் ஞானியடா!

ஐந்து பூதமே
....உலகமடா- உன்
ஐம்புலன் அட(க்)ங்குதல் வெற்றியடா!
ஐந்திற்கு மேலே
.....ஆறறிவே- நல்
அறமின்றிப் போனால் பேரிழிவே!

ஏழாம் தலைமுறை
......வாழ்ந்திடவும்- நாம்
இயற்கையைக் காப்பது
நியாயமன்றோ?!
பாழாய்ப் போவதைத்
......தடுப்பதொன்றும்- ஒரு
எட்டாக் கனியோ?! இல்லையன்றோ?!

ஒன்பது துவார
....ஊனுள்ளே- உயிர்
உலவிட படைத்ததும் அவன்றோ?
என்றும் அவனை
.....நினைந்திருந்தால்- உயர்
பத்தும் பறந்து வருமன்றோ!!

✍️செ. இராசா

10/07/2024

வாரா வாரம்

 


வாரா வாரம் எப்பொழுதும்
....வருவோம் கடற்கரை மீன்பிடிக்க!
வாரா வாரம் என்பதெல்லாம்
....வந்ததே இல்லை என்பதுபோல்
வாரா மீன்கள் அத்தனையும்
....வருதே வருதே என்றுசொல்லி
தீரா ஆசையில் எப்பொழுதும்
....திரும்பி வருவோம் மீன்பிடித்தே!

பிடித்த மீன்களை வீடுவந்து
..பிரித்து விடுவோம் வகைவகையாய்
பிடித்த வகையில் ஓர்பங்கை
..பிரியமாய் சமைக்க மனம்வைத்தே
தடித்த மீனைக் கழுவுகையில்
..சடக்கென செதில்கை இறங்கியதே
முடிந்த வரையும் முயன்றாலும்
...வரவே இல்லை செதில்வெளியே!

என்ன ஆகும் எனநினைந்தே
...இருந்தே விட்டேன் சிலமாதம்!
இன்னல் கொஞ்சம் இருந்தாலும்
...இருந்தேன் அதுயென் பிடிவாதம்!
என்னதான் உள்ளே என்றறிய
...எடுத்தேன் முடிவை ஒருவழியாய்!
சின்ன செதில்தான் இருப்பதினால்
...திறப்பதா? விடுவதா? முடிவெனதே!

✍️செ. இராசா

08/07/2024

ஐந்துபூத மொன்றுசேர

ஐந்துபூத மொன்றுசேர
.......ஆனதிந்த உருவமே!
ஐந்துஞானப் பொறிகளாலே
.......ஆனதிந்த உடலுமே!
ஐந்தின்மாத் திரைகளாலே
.......ஆனதிந்த உணர்வுமே!
ஐந்தையா(ரு)வு மறிவதாலே
.......ஆதியர்த்தம் தெரியுமே!

04/07/2024

ப்லா... ப்லா... பலா....

 

(சிறுவர்களுக்கான பாடல்)
 
ஏன்டி இப்படி பண்ணுற?
எதுக்கு இப்படி பண்ணுற?
கேட்டாக்க நீ சொல்லுற..
ப்லா... ப்லா... பலா....
ப்லா... ப்லா... பலா...
ஏன்டா இப்படி பண்ணுற?
எதுக்கு இப்படி பண்ணுற?
கேட்டாக்க நீ சொல்லுற...
 
ப்லா... ப்லா... பலா....
ப்லா... ப்லா... பலா...
 
யாரும் வீட்டுக்கு வந்தாக்க
வாங்கனு சொல்ல மாட்டீங்க...
வாயத் தொறந்து பேசுங்கன்னா
பேசக் கூட மாட்டீங்க...
கடைக்குப் போக சொன்னாக்க
அதுக்குப் போக மாட்டீங்க..
தனக்கு மட்டும் வேலையின்னா
உடனே கிளம்பிப் போவீங்க..
(....ஏன்டி)
 
ப்லா... ப்லா... பலா....
ப்லா... ப்லா... பலா...
 
உறவு முறைய சொல்லுனாக்க
முறைச்சு முறைச்சு பாப்பீங்க..
ஒட்டிப் பிறந்த உடன்பிறப்ப
எதிரிபோல நினைப்பீங்க..
உதவியேதும் கேட்டாக்க
டயமே இல்லைன்னு சொல்வீங்க..
இருக்கும் நேரம் அத்தனையும்
நெட்டக் காலி செய்வீங்க...
(....ஏன்டி)
 
ப்லா... ப்லா... பலா....
ப்லா... ப்லா... பலா...
✍️செ. இராசா

03/07/2024

வாழ்ந்தா...- இப்படி
வாழ்ந்தான்னு சொல்லனும்!
வாழ்ந்தால்- அப்படி
வாழ்வாங்கு வாழனும்

01/07/2024

எந்தத் துறையெடுத்தா

 

எந்தத் துறையெடுத்தா
......என்ன கிடைக்குமென்று
சிந்திச்சு பார்த்துதான்
.....சேருறான்?- விந்தையாய்
கற்றத விட்டுட்டு
.....காசுக்காய் ஐடி(IT)யென்றால்
மற்றதற்(கு) என்னயிங்கே
.....வாழ்வு?!