26/05/2025

வருகிறோம் வளர்கிறோம்

 

வருகிறோம் வளர்கிறோம்
.......வளர்ந்தபின் போகிறோம்
மாறியது ஒன்றும் இல்லையே!
தருகிறோம் தளர்கிறோம்
.......தளர்ந்தபின் விழுகிறோம்
தாண்டியது ஒன்றும் இல்லையே!
ஒருவராய் உயிர்க்கிறோம்
........ஒருவரில் கலக்கிறோம்
ஓடியது வாழ்வின் எல்லையே!
ஒருவரின் வழியிலே
........ ஒருவரை விதைக்கிறோம்
ஊழ்வரவு தீர வில்லையே!
✍️செ. இராசா

24/05/2025

நகைச்சுவை

 

நகைச்சுவை உள்ளுணர்வால்
.....நட்பு பெருகும்
பகையுணர்வு கொண்டிருந்தால்
.....பாழாம்- மிகையில்லை
நல்லிணக்கம் கூட்டும்
.....நகையுணர்வு மேலோங்க
சொல்லிலே வேண்டும்
.....சுவை
✍️செ. இராசா

12/05/2025

நல்லிணக்கம்

 

நல்லிணக்கம் உண்டேல் நமைவெல்ல யாருண்டோ?
சொல்லி அடித்திடலாம் சூழ்ந்து
(1)

இணக்கமுடன் வாழ இடர்:இடரிப் போகும்
கணம்கணம் வாழ்ந்து கட!
(2)

உடலோ டுயிரென ஒற்றுமையாய்ப் போனால்
கடலும் கடுகளவே காண்!
(3)

தன்னோடு தானே தனியாக நிற்பவர்கள்
என்றைக்கும் போகார் இணைந்து
(4)

உடலுயிர் உள்ளமெலாம் ஓர்கோட்டில் வந்தால்
கடந்திடலாம் இவ்வாழ்வைக் கண்டு
(5)

தெளிவான ஒத்திசைவில் தேனீக்கள் ஆனால்
எளிதாகக் கிட்டும் இலக்கு
(6)

குடும்ப உறவுக்குள் கூடும் இணக்கம்
அடுத்துவெளி போனால் அழகு
(7)

இணக்கமுடன் செய்கின்ற எச்செயலும் வாழ்வில்
வணக்கமிட வைக்கும் மகிழ்ந்து
(8)



சுற்றமும் நட்புமாய் சூழ்ந்திருக்க வாழ்பவர்கள்
பெற்றவரம் நல்லிணக்கப் பேறு
(9)

எல்லா உறவும் உறவல்ல எப்பிணக்கும்
இல்லா உறவே உறவு
(10)

✍️செ. இராசா

11/05/2025

பாகிஸ்தானிய நண்பர் திரு. ஹபீப்

 

இனி இராணுவத்தில் சேர உடல் தகுதியைவிட தொழில்நுட்ப அறிவும் செயற்கை நுண்ணறிவு என்னும் AI தொழில் நுட்ப அறிவுமே தேவை என்பதை உணர்த்தியுள்ளது இந்தப் போர். அதைவிட முக்கியம் போலித் தகவல்களைப் பரப்பும் சமூக வலைத்தளப் போராளிகளுக்குத் தக்க பதிலடி கொடுக்க அதே ரீதியிலான சமூக வலைத்தளப் பின்புலம் கொண்ட ஒரு நான்காவது படையும் தேவையென்பதே. எது எப்படியோ இந்தப்போர் முடிவுக்கு வந்தமையில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் உறவுகளே...

காரணம், நான் பற்பல பாகிஸ்தானிய மக்களுடன் பழகியவன் என்கிற ரீதியில், அவர்களைப்பற்றி நன்றாகவே அறிந்து வைத்துள்ளேன். ஆம் பெரும்பாலானவர்கள் உண்மையை உணர்ந்த நல்ல நண்பர்களே. நாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளதை நன்றாகவே உணர்ந்தவர்கள். இதை உணராத சில அரசியல் வாதிகளாலேயே இப்படிப்பட்ட சூழல் உருவாகியுள்ளது என்பதை ஒத்துக் கொள்பவர்கள்.

எது எப்படியோ... நாங்கள் இங்கே கத்தாரில் உள்ள இந்திய பாகிஸ்தானியர்கள் ஒற்றுமையாகவே உள்ளோம் என்பதை உறுதிப்படுத்தவே இந்தப் படத்தைப் பகிர்கின்றேன் உறவுகளே...

இந்தப் படத்தில் உள்ளவர் எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பாகிஸ்தானிய நண்பர் திரு. ஹபீப் அவர்கள் (முன்னாள் கத்தார் அரசு ஊழியர்) அவருடன் அடியேன் செ. இராசமாணிக்கமாகிய யாம்.

✍️செ. இராசா

06/05/2025

வீட்டின்பால்

 

சூப்பினிது ஜாமினிது என்பர்தம் வீட்டின்பால்
ஆப்பமே உண்ணா தவர்