11/10/2020

ஆத்திசூடி இறுதிப் பகுதி-10, ஆயுத வருக்கம்

 #ஆத்திசூடி_இறுதிப்_பகுதி_10
#கட்டுரை_மற்றும்_இறுதிக்குறள்
#குறள்_வெண்பாவில்_தெளிவுரை
#ஆயுத_வருக்கம்_புதிய_பெயர்

அனைவருக்கும் இனிய வணக்கம்,

ஔவையார் பற்றி அறியாத தமிழரில்லை. அல்லது ஔவையாரை அறியாதவர்கள் தமிழரே இல்லை. ஆம்... ஔவையார் என்ற பெயரில் பல ஔவையார்கள் இருந்துள்ளனர். சங்க காலத்தில் உள்ள ஔவையார் வேறு. ஆத்திசூடி ஔவையார் வேறு.

தமிழ் இலக்கியத்தில் மிகவும் நீண்ட காவியமான கம்ப ராமாயணத்திற்கும் இடம் உண்டு (10000+ பாடல்கள்) மிக மிகச் சிறிய அளவிலான ஆத்திசூடிக்கும் மிகப்பெரிய இடம் உண்டு. ஆத்திசூடி வரும் காலத்திற்கேற்ற வடிவம் என்றே சொல்லலாம். இப்போதெல்லாம் நீள்கவிதைகளை அல்லது நீளமான கட்டுரைகளை அனைவரும் விரும்பிப் படிக்கின்றார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அதற்காக அதைச் சரியென்று ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் எதார்த்தத்தை ஏற்க வேண்டுகிறேன்.

அப்படிப் பார்க்கையில் இரண்டு அல்லது மூன்றே சீர்களை வைத்து, தமிழ் எழுத்துக்களின் வரிசை முறைகளையும் கணக்கில் கொண்டு, 109 எளிய வாழ்வியல் சொற்றொடர்களை உருவாக்கிய ஔவையாரின் ஆத்திசூடியை தமிழ்கூறும் நல்லுலகம் எந்நாளும் போற்றித் துதிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இங்கே நான் கொண்ட முயற்சியானது 07.09.2020 ஆம் தேதி என் பையனுக்கு பிறந்தநாள் பரிசாக என்ன வழங்கலாம் என்று யோசித்தபோது ஆத்திசூடிக்கு ஏன் குறள் வெண்பாவில் தெளிவுரை எழுதக் கூடாது என்ற எண்ணத்தால் உதயமானது. நாம் என்னதான் எத்தனையோ பிறந்தநாள் பரிசுகள் வழங்கினாலும், இப்படிப்பட்ட வித்தியாசமான படைப்புகள் வழங்கும்போது அதில் அவர் மட்டுமல்ல நமக்கும் ஒரு ஆத்மதிருப்தி மேலும் இந்த சமூகத்திற்கும் ஒரு படைப்பு கிடைக்கிறது என்பதை உணர்ந்தேன்.

இந்த முயற்சி ஆத்திசூடிக்குத் #தெளிவுரை என்றும் சொல்லலாம் அல்லது ஆத்திசூடியின் கருவில் உருவான #புதுவுரை என்றும் சொல்லலாம். இவை அனைத்தும் குறள் வெண்பாக்களில் உருவானது. இவற்றில் சில தெளிவுரைகளில் யாரும் சொல்லாத வகையில் என் சிந்தைக்கும் ஔவையாரின் கருத்துக்கும் ஒப்பான புது விளக்கங்களும் உள்ளது. அன்பர்களே, இம்முயற்சியில் ஏதேனும் தவறிருந்தால் எம்மை மன்னித்தருளி தவற்றைச் சுட்டிக்காட்டவும் வேண்டுகிறேன்.

முதலில் பையனுக்காக உயிர்வருக்கம் எழுதியபோது நான் ஆயுத எழுத்தை எடுத்துக் கொள்ளவில்லை. காரணம் அதில் வரும் 12 சொற்றொடர்களும் சிறுவர்களுக்கான அறிவுரையாக இருக்கும். ஆயுத எழுத்து தனித்து இருந்ததால் பிறகு எழுதலாம் என்று நினைத்திருந்தேன். இக்கட்டுரையின் முடிவில் ஆயுத எழுத்தோடு முடித்து வைக்கலாம் என்றும் இறையாற்றல் வழிசெய்துள்ளது என்றே இப்போது நினைக்கிறேன்.

இதை எழுதத் தூண்டிய என் நண்பன் திரு. சிவக்குமார் அவர்களுக்கு இந்த ஆத்திசூடி முழுவதையும் சமர்ப்பணம் செய்து எமக்கு ஆதரவளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நண்பர் திரு சிவக்குமார் அவர்கள் வேறு யாருமல்ல. இந்த "நான்" என்ற நாணயத்தின் மறுபக்கம் ஆவார்‌. அவர் இல்லாமல் என் தமிழும் இல்லை நானும் இல்லை. இது என் நண்பரை நான் பாராட்டும் வெறும் புகழ் வார்த்தையாக எண்ண வேண்டாம். எதையுமே எதிர்பாராமல் என்னைத் தாங்கிப் பிடிக்கும் வேராக உள்ள அந்த மா உறவுக்கும் நல்ல தமிழ் நேசனுக்கும் இந்த அடியேன் செய்யும் அன்புக் காணிக்கை அவ்வளவே....

இதோ இந்த இறுதிக் குறள் வெண்பாத் தெளிவுரையோடு அல்லது புதுவுரையோடு என் ஆத்திசூடிப் பதிவும் நிறைவடைகிறது.

#ஆயுத_எழுத்து_ஃ
#அஃகஞ்_சுருக்கேல்

தந்த பணத்திற்குத் தானியத்தைத் தந்திடாமல்
கொஞ்சம் குறைப்பதும் தப்பு

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

அன்புடன்,

செ.இராசா

No comments: