02/06/2018

நான் ரசித்த கவிஞர்கள்

எழுதுபவர் அனைவருமே
எழுத்துலகை வெல்வதில்லை!
எழுத்துகள் அனைத்துமே
எழுத்துலகில் நிற்பதில்லை!

ஆனாலும் சில நபர்கள்
ஆளுமையால் வெல்வதுண்டு!
அழகான எழுத்துகளால்
அகத்தினிலே நிற்பதுண்டு!

அப்படி என் இதயத்தை
ஆட்சி செய்த கவிஞரிலே
அகம் நிறைந்த சிலர்பற்றி
அடியேன் எழுதுகின்றேன்....

அடிகளிலே பிழை இருப்பின்
அடியேனின் பிழைபொறுக்க
அறிவுலகம் முன்னாலே
அறிவிலி நான் வீழுகின்றேன்!

இணையத்தில் சிறப்பாக
இயங்குகின்ற கவிஞர்களில்
இதயத்தில் இடம்பிடித்த
இணையில்லா கவிஞரெனில்;

எந்நாளும் சொல்லிடுவேன்
அன்புமிகு தாசரென்று
விலையில்லா கவிபடைத்த
வீர விக்டர் தாசரென்று...

அத்தனை வடிவங்களும்
அறிந்துவைத்த கவிஞரவர்!
அறிவுலகை எந்நாளும்
அடக்கிவைத்த அறிஞரவர்!

அவருக்கு அடுத்தபடி
அடியேன் வியந்ததெனில்
பா எழுதும் வித்தகராம்
பாட்டுக்காரர் வரிகளிலே....

அழகுத் தமிழ்ச் சொல்லாலே
அழகுசெய்யும் இசைக்கவிஞர்!
அணு அணுவாய்த் தமிழ்குடித்த
அணுராதா கட்டபொம்மர்!

இலக்கணங்கள் இலக்கியங்கள்
இவருக்கு அத்துப்படி
இவரெழுத்தின் முன்னாலே
இளைஞர்கள் தவிடுபொடி

அவருக்கு அடுத்தபடி
அடியேன் நான் அசந்ததெனில்
சேதுவின் மாதவனார்
செதுக்கிய வரிகளிலே...

பட்டையைக் கிளப்புகின்ற
பட்டறைக் கவிஞரவர்!
சோலையில் தமிழ்கொஞ்சும்
சோர்வில்லாத் தமிழரவர்!

இன்னும் இன்னும் என் மனதில்
எத்தனையோ கவிஞர்கள்!
என்னவென்று சொல்லிடுவேன்
அனைவருமே சிறந்தவர்கள்!

அவர்களையும் எழுதிடவே
அடியேன் நான் ஆசைகொண்டேன்!
ஆனாலும்....முடியாமல்
அகத்தினிலே அடக்கிவிட்டேன்!

அனைவரையும் வணங்குகின்றேன்!

No comments: