12/06/2018

காட்டு தர்பார்



குனிந்து குனிந்து வணங்கிநின்ற
அன்றைய முன்னால் அடிமைகளே...
நிமிரும் காலம் வந்தபின்னும்
நிமிர்ந்திட இன்னும் பழகலையோ..

கொழுத்து வளர்ந்த முதலைகளால்
கொழுப்பைக் கூட்டிய பன்றிகளே..
கொடுத்த ஆணைக்கு வாலாட்டி
கொலைச்செயல் இன்று புரிந்தீரோ?!

கொதித்து எழுந்தோர் அனைவரையும்
கொன்று குவித்த பாவிகளே...
சுடச்சுட விழுந்தோர் அனைவருமே-எம்
சிந்தையில் வாழ்பவர் மறந்தீரோ?!

ஹிட்லரைப் போலவே செயல்புரிந்து
காட்டு தர்பார் செய்வோரே....
ஆட்சியின் ஆட்டம் முடிந்தபின்னே
ஓட்டு வேட்டைக்கு வருவீரோ?!!

தன்வினை என்பதே தன்னைச்சுடும்
என்பதும் அறிவோம் உறவுகளே...
சவத்தின்மேல் ஆட்சி புரிவோர்க்கு
சமாதி கட்டுவோம் தோழர்களே..

✍️செ. இராசா

No comments: