03/05/2018

அறிவு என்பதே நான்தான் என்றான்



கவிதையின் கணக்கை நிறுத்தி வைத்த
கடவுளின் கருணையைக் கேள்வி கேட்டேன்!
கற்றிட வேண்டிய எல்லாம் கற்றால்
கடவுளே கவிதையாய் வருவான் என்றான்!

கற்கும் வழியினைக் காட்டிட வேண்டி
கருணைக் கடவுளை மீண்டும் கேட்டேன்!
படைத்தவன் படைத்த படைப்பில் சிறந்த
படைப்பினை நாளும் படிக்கச் சொன்னான்!

படைப்புகள் பிறப்பது எப்படி என்றால்
படைப்பின் மூலம் நூல்கள் என்றான்!
நூல்கள் பிறப்பது எப்படி என்றால்
நூல்களின் பிறப்பு கற்பதில் என்றான்!

கற்பதில் வருவது யாதெனக் கேட்டால்
கற்பதில் வருவது அறிவு என்றான்!
அறிவு என்பது யாதெனக் கேட்டால்
அறிவு என்பதே நான்தான் என்றான்!

✍️செ. இராசா

No comments: